கள்ளக்குறிச்சி | வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை தாக்கி 200 சவரன் தங்க நகைகள் கொள்ளை
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் வசித்து வரும் கேசரிவர்மன். கடந்த 20 வருடங்களாக துபாயில் பணியாற்றியதோடு தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது இரண்டாவது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதற்காக தனது சொந்த ஊரான கடுவனூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் கடந்த வாரம் வந்துள்ளார். இதையடுத்து வரும் ஜூலை 7ம் தேதி தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இந்நிலையில், வங்கி லாக்கரில் இருந்த 200 சவரன் தங்க நகைகளை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார். இதையடுத்து கேசரிவர்மன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பாஸ்போர்ட்டை ரினிவல் செய்வதற்காக சென்னைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் கேசரி வர்மனின் தந்தை முனியன் மற்றும் தாயார் ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, கையில் இரும்பு ராடுடன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த முனியன் மற்றும் அவரது மனைவி இருவரையும் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டி பீரோவில் இருந்த 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார், கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.