”அவருக்கு 25,000 வாக்குகள்தான் கிடைக்கும்” - அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம், இன்று இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தவெகவில் தஞ்சமடைந்தார். அவருக்கு மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருடைய அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று சென்னையில் பசுமை வழிச்சாலையில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
இவர் திமுக மாவட்டச் சுற்றுச்சூழல் அணி செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே கே செல்வம், “52 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் அதிமுக ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. என் மீது பழி சொல்லி என்னை அதிமுகவில் இருந்து நீக்கினார் செங்கோட்டையன். அதனால் நான் திமுகவில் இணைந்தேன். தற்போது செங்கோட்டையன், அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார், அவர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் எனது தந்தை கேஏகேதான். 2006, 2011, 2016ல் எங்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.
அதேபோல் 2026ல் கோபி தொகுதியில் யார் வேட்பாளராக அறிவித்தாலும் அவர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறுவார். செங்கோட்டையன் தனிப்பட்ட முறையில் இதுவரை கோபி தொகுதிக்கு எந்த ஒரு தனித்துவ திட்டத்தையும் கொண்டு வந்தது இல்லை. செங்கோட்டையனால் கோபி பகுதியில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அரசியல் கத்துக்குட்டியான விஜயுடன் இணைந்து ஈரோட்டை தவெகவின் கோட்டையாக மாற்றுவேன் என கூறுகிறார். ஈரோடு என்றுமே அதிமுகவின் கோட்டைதான். செங்கோட்டையன் இல்லை என்பதால் அதிமுக பலவீனமாகும் என்று கூறுவது உண்மையல்ல. 2026ல் செங்கோட்டையன் அதே கோபி தொகுதியில் போட்டியிட்டால் 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெறுவார்” என்று கூறினார்.

