"அனிருத் லேட்டஸ்ட் ஆக ஸ்பீடாக இருக்கிறார்; இளம் இசையமைப்பாளர்களுக்கு ஒன்றை மட்டும்.." - தேவா பேட்டி
செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரையில் இசை அமைப்பாளர் தேவாவின் Live in concert நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி ஒத்தக்கடை அருகே உள்ள வேலம்மாள் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் தேவா கூறுகையில்...
கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்த வாய்ப்பு:
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது எனது பாடலான "வராரு வராரு அழகர் வாராரு என்ற பாடல்" ஒலித்துக் கொண்டே இருக்கும். அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனை நான் முதல்முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது:
இந்த இசைக் கச்சேரி 60 பேர் கொண்ட இசைக் குழுவினருடன் இணைந்து நடத்த உள்ளேன். 5 முதல் 6 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. காலம் கடந்து எனது இசையும், ராஜா இசையும் இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கின்றேன். எனக்கு அனிருத் ரொம்ப பிடிக்கும். அவர் லேட்டஸ்ட் ஆக ஸ்பீடாக இருக்கிறார். எனக்கு நடிக்க நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பண்ண விருப்பமில்லை. இசை வொர்க் டைட்டாக இருப்பதால் நடிக்க விரும்பவில்லை.
இசையமைப்பாளர்களுக்கு இடையே தலைமுறை இடைவெளி இருக்கிறது:
தற்போது இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களுக்கு இசை பிடிக்கவில்லை என்றால் தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று தான் அர்த்தம். எனக்கு அனைவரின் இசையும் பிடிக்கத்தான் செய்கிறது. கந்த சஷ்டி கவசம் பாடலை போல, சூரியன் படத்தில் 18 வயதில் பாடலை போல சேர்த்து இசையமைத்தேன். அதை நான் காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
அல்லு அர்ஜூன் மீது நடவடிக்கை - துரதிஷ்டவசமானது:
ஹைதராபாத்தில் புஸ்பா-2 படத்தின் போது அல்லு அர்ஜூனை காண சென்றபோது கூட்ட நெரிசலில் பெண் மற்றும் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நடிகரின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது. அது குறித்து தெரியாது என்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பு நடைபெறவில்லை அதனை அவரும் கூறியிருக்கிறார். அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட்டதை நான் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தேன்.
இளம் இசை அமைப்பாளர்களுக்கு கூறுவதற்கு எதுவும் இல்லை:
இப்போது உள்ள இளம் இசை அமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கின்றார்கள். அவர்களுக்கு கூறுவதற்கு எதுவும் கிடையாது. ஆனால், ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இளம் இசையமைப்பாளர்கள் பணத்தை சேமித்து வைத்து வரும் காலத்திற்கு தேவையானவற்றை சேமிக்க வேண்டும்.
மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பப்படுகிறேன். அந்த ஆதங்கமும் எனக்கு இருக்கிறது அதற்காக காத்திருக்கிறேன். இசைமையைப்பாளர்கள் நடிகராக மாறுவது அவர்களின் தனித்திறமை" என்று கூறினார்.