”ஆதவ் அர்ஜுனாவுக்கு வாழ்த்துகள்; எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம்” - திருமாவளவன்!
தவெக-வில் இணைகிறாரா ஆதவ் அர்ஜுனா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார் என்றும், த.வெ.க-வில் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட உள்ளது. அதோடு தேர்தல் வியூகங்களை வகுப்பதில் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் ஆதவ் அர்ஜுனா செயல்பட உள்ளார். இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் பிரத்யேக பேட்டி:
இதுகுறித்து புதிய தலைமுறை செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த பிரத்தேக பேட்டியில்...
கட்சியில் ஆதவ் ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்திருந்தோம். அவர், கட்சியில் இருந்து வெளியேறுவதாக கடிதம் எழுதினார். ஆகவே அவர் தானாக கட்சியில் இருந்து விலகினார் என்பதுதான் சரி. இந்நிலையில், கட்சியின் வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் அவர் மீறினார் என்பதுதான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்தது.
ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவது உண்மைதானா? என்ற கேள்வி பதிலளித்த அவர்..
யூகத்தின் அடிப்படையிலானது. அவர் விஜயை சந்தித்தார் என்பதை வைத்துக் கொண்டு கட்சியில் இணையப் போகிறார் என ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் செய்தியை வெளியிடுகின்றன. அப்படி அவர், விஜய் அவர்களுடன் இணைந்து இயங்கப் போகிறார் என்பது நடக்குமானால், மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
கட்சியின் தலைமையின் மீதும், கட்சியின் மீதும் விசுவாசத்தோடு செயல்பட்டார் ஆதவ் அர்ஜுனா:
விசிக-வில் துணை பொதுச் செயலாளர்களாக 10க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். நிலப்பரப்பு அடிப்படையிலும், கருத்தியல் அடிப்படையிலும், நிர்வாக ரீதியாகவும் வேலைகளை பகிர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் ஆதவ் அர்ஜுனா துணை பொதுச் செயலாளராக பணியாற்றினார். தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கான பொறுப்பாளராக செயல்பட்டார். கட்சியின் பல பொறுப்பாளர்களில் அவரும் ஒருவர். அவர் இணைந்து செயல்பட்ட காலத்தில் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட்டார். எல்லோருடன் இணக்கமாகவும் இருந்தார். கட்சியின் தலைமையின் மீதும், கட்சியின் மீதும் விசுவாசத்தோடு செயல்பட்டார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆதவ் அர்ஜுனா எங்களோடு தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம்:
அதே சமயம் கூட்டணி தொடர்பான மாறுபட்ட கருத்துக்களை பேசுகையில், அது கட்சியின் எதிர்காலத்திற்கு ஒரு நெருக்கடியாக மாறியது. எனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் உரிய விளக்கத்தை தந்து, அதற்கு பின்னர் கட்சியில் இணைய முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
ஆனால், ஆதவ் அர்ஜுனா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்தார் என்பது எதிர்பாராத நிகழ்வு. அதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் எங்களோடு தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதனிடையே தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் ஆதவ் அர்ஜுனாவுக்கு என்னப் பொறுப்பு வழங்கப்படும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.