மதுரை மாவட்டம் மேலூர் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு, கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், தலைமை கழக பேச்சாளராக சூர்யா வெற்றிகொண்டான் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் திமுகவின் வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்.
பெருந்தலைவர் காமராஜரை பெருமைப்படுத்திய கட்சி திமுக. காமராஜரின் இல்லத்தில் தீ வைத்த கட்சி பாரதிய ஜனதாவின் அமைப்பான ஜனசங்கம். திமுக-வை எதிர்த்து பேசியவர் எவரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது அமலாக்கத்துறை மூலம் திமுகவை மிரட்ட ஒன்றிய அரசு நினைக்கிறது. ஆனால் அதை சுக்கு நூறாக உடைக்கும் வகையில் இன்றைய (நேற்று செந்தில் பாலாஜிக்கு எதிராக வழங்கப்பட்ட) தீர்ப்பு அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி. இன்னொரு முறை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் தேர்தலே நடக்காது. பொதுசிவில் சட்டம் மூலம் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை தனிமைப்படுத்தி ‘இந்துத்துவா அமைப்புகள் மட்டுமே முக்கியம் ’என்ற கோட்பாடு கொண்டுவரப்படும்” என்று பேசினார்.