
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விருதுநகரில் குலதெய்வ வழிபாடு முடித்துவிட்டு மதுரையில் மீனாட்சி அம்மன் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ளேன்.
கேப்டன் விஜயகாந்தின் உடல் நலம் பின்னடைவு தான். ஆனால், கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார். ஆனால், பழையபடி பேசுவார் எழுந்து வருவார் என்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். உங்களை மாதிரியே நாங்களும் நம்புகிறோம். இப்போது வரைக்கும் கேப்டன் நலமாக தான் இருக்கிறார்.
கேப்டனின் மந்திரமே "முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது" என்பது தான். அதைத்தான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம். என்னுடைய கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன்.
அதிமுக கட்சிக்குள் குழப்பம் இருக்கிறது. இதில் நான் பெருசா, நீ பெருசா என்பதாக தான் இந்த மாநாட்டை நான் பார்க்கிறேன். தேமுதிகவில் இருந்து மட்டும் மற்ற கட்சிக்கு செல்லவில்லை. பல கட்சியில் இருந்தும் சென்றுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டு தான் செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து திமுகவிற்கு சென்று தற்போது ஜெயிலுக்குப் போய் இருக்கிறார்.. தேமுதிகவில் இருந்து மட்டும் மாற்றுக் கட்சிக்கு செல்கின்றனர் என்ற எண்ணத்தை மக்கள் மாற்ற வேண்டும்.
தேமுதிகவிலிருந்து மற்ற கட்சிக்கு செல்பவர்கள் காசு வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் என்று சொன்னால் எப்படி அவர்களுக்கு மதிப்பு வரும். இங்கிருக்கும் போது அண்ணி, தம்பி என கூறுவார்கள் வெளியே சென்றவுடன் அந்நியவாதியாக தெரிகிறோம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கேப்டன் அறிவிப்பார்.
நீட் தேர்வு தமிழகத்தில் மட்டுமில்லை, இந்தியா முழுவதும் உள்ளது. இதனை அரசியல் ஆக்காமல் சரியான விஷயத்தை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை விட பின் தங்கிய மாநிலங்களில் கூட இறப்பு குறைவாக தான் உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என பொய்யான வாக்குறுதியை திமுக அரசு கூறுவதால் மாணவர்களின் அழுத்தம் ஏற்படுகிறது” என்றார்.