சாதி அடையாளமின்றி கோயில் திருவிழாக்களை நடத்த வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு!
கோயில் திருவிழாக்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தவிர்க்க அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில் தேர் திருவிழா நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, விழா அழைப்பிதழ்களில் சாதி பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அறநிலையத் துறை தரப்பில், விழா அழைப்பிதழ்களில் சாதி பெயரைத் தவிர்க்க வேண்டும் என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் திருவிழாக்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர் பொதுமக்கள் என்ற அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், சாதிப் பெயருடன் விழா நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.