சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஓய்வுபெறுவதாக இருந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இதில் பல பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தொழிலதிபர்கள் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஜி. பொன் மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் இந்த வழக்கை திடீரென்று சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளி யிட்டது. 

அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. 

இந்நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் இன்று  விசாரணைக்கு வந்தது. 


அப்போது, சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறிப்பித்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு இன்று ஓய்வு பெறும் ஐஜி, பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் வழக்கில் ஒரு வருடத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர் சிலை கடத்தல் வழக்கு விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வார். 

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பற்றி ஐஜி. பொன் மாணிக்கவேல் கூறும்போது, ‘நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கிறேன். இன்னும் ஒரு வருடத்தில் சிலைக்கடத்தல் வழக்கை முடிப்பேன்’ என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com