ரூ.276 கோடி கட்டண பாக்கி | சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல அரசு பேருந்துகளுக்கு தடை..!
தென் மாவட்டங்களை இணைக்கும் NH44 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, எட்டுர்வட்டம் சுங்கச்சாவடி, சாலைப்புதூர் சுங்கச்சாவடி, நாங்குநேரி சுங்கச்சாவடி ஆகிய 4 நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சுமார் 276 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பணத்தை விரைந்து செலுத்த வேண்டும். இல்லை என்றால் இன்று முதல் (10.07.2025) அரசு பேருந்துகளை சுங்கச்சாவடியில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவு இன்று முதல் (10.07.2025) நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தென் மாவட்டங்களுக்கு வந்து செல்லும் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை (10.07.2025) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. சுங்கச்சாவடிகளில், பணம் இல்லாத பேருந்து விவரம் மற்றும் பேருந்து ஓட்டுநர் நடத்துநர் பெயர் மற்றும் அவர்களின் கையொப்பத்துடன் நள்ளிரவு 12 மணி முதல் கடிதம் வாங்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுங்கச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் பணியில் உள்ளனர்.