ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தங்கம் விலை 9% உயர்வு.. இதுதான் காரணம்? மீண்டும் உயருமா?
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்யா-உக்ரைன் போர், ட்ரம்ப் கால அசாதாரண கொள்கைகள் காரணமாக தங்கம் வரலாறு காணாத உயர்வை எட்டியது. டாலரின் மீது நம்பிக்கை குறைந்ததால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பத்திரங்களை விற்று தங்கம் குவித்தன. இந்த பின்னணியில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சர்வதேச தேவை, டாலர் மதிப்பு, பணவீக்கம் காரணமாக தங்கம் 9% உயர்ந்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை திடீர் என அதிகரித்து வந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவு பல மடங்கு அதிகரித்தது. இது, சர்வதேச அரங்கில் பெரும் அசாதாரண நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. தங்கம் விலை இந்த அளவு அதிகரித்ததற்கு ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத செயல்பாடு போன்றவைகள் முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக, சீனா உள்ளிட்ட நாடுகள் டாலரின் மேல் இருந்த நம்பிக்கையை இழந்து, தங்களிடமிருந்த அமெரிக்க பத்திரங்களை முன்னெப்போதும் இல்லாத அளவு விற்பனை செய்து அதற்குப் பதில் தங்கத்தை வாங்கிக் குவித்தன. இந்தியாவும் கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் 77 டன் தங்கத்தை வாங்கிக் குவித்தது.
இந்தசூழலில் தொடர்ந்து ஏறுமுகத்துலயே தங்கம் இருந்துவரும் நிலையில், இடையில் ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் காரணமாக தங்கம் விலை குறைவும் ஏற்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தங்கம் விலை மீண்டும் 9% அதிகரித்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இம்மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக என்றும், பாதுகாப்பு சார்ந்த முதலீடாக உள்ள தங்கம் மீது முதலீட்டாளர்களின் கவனம் தொடரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.அமெரிக்க டாலர் மதிப்பு, பணவீக்கம், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் உள்ளிட்டவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணிகள் என்றும் கூறுகின்றனர்.

