விஜய்க்கு ஆதரவு? உடையும் காங். - திமுக கூட்டணி? வைரலில் மாணிக்கம் தாகூரின் பதிவு!
தவெக ஆட்சியமைப்பதற்கு விஜய் ஆதரவு கோரியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். விஜயின் தவெகவிற்கு ஆதரவு கொடுப்பது பற்றி இன்று தமிழக காங்கிரஸ் தலைமை முடிவெடிக்க உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. இதையடுத்து, அது அடுத்தகட்டமாக ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது.
அந்த வகையில், தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு இன்னும் 11 இடங்கள் தேவை என்கிற நிலையில், காங்கிரஸ் (5), விசிக (2), கம்யூனிஸ்டுகள் (4), தேமுதிகவின் (1) ஆதரவுடன் ஆட்சியில் அமரலாம். அல்லது இரண்டாவது வாய்ப்பாக, காங்கிரஸ் (5), பாமக (4), தேமுதிக (1), அமமுக (1) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாம். மூன்றாவது வாய்ப்பாக அதிமுக பார்க்கப்படுகிறது. இதுவே நீண்டக்கால பலனை அளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். இத்தகைய சூழலில், தவெக ஆட்சியமைப்பதற்கு விஜய் ஆதரவு கோரியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். விஜயின் தவெகவிற்கு ஆதரவு கொடுப்பது பற்றி இன்று தமிழக காங்கிரஸ் தலைமை முடிவெடிக்க உள்ளது.
இந்த நிலையில், மாணிக்கம் தாகூரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், “தீர்ப்பு திமுக அரசுக்கு எதிராக வந்துள்ளது. அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் பாதிப் பேர் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். எங்கள் தரப்பில் எவ்விதத் தவறும் இல்லாத நிலையிலும், நாங்கள் எதிர்பாராத பாதிப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. இப்போது, பாஜக தமிழ்நாட்டின் மீது தன் பார்வையைச் செலுத்தி வருகிறது. நமக்கு முன்னால் உள்ள கேள்வி மிகத் தெளிவானது. மக்களின் தீர்ப்பால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் நாம் துணை நிற்க வேண்டுமா அல்லது பாஜகவை எதிர்த்துப் போராடிய சக்தியுடன் இணைந்து, பாஜக தமிழ்நாட்டை ஆள்வதைத் தடுப்பதற்காக நாம் போராட வேண்டுமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்! தோற்றாலும் தோல்வியில்லை — நம்மிடம்! பாரதியார்...” எனப் பதிவிட்டிருந்தார். இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி பிளவுபட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

