திருச்சி|விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர்... புகாரை ஏற்க மறுத்த காவல்துறை!
திருச்சி வயலூர் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. வரலாறு பயின்று வருகிறார் அபிஷேக் என்னும் 18 வயது நிரம்பிய மாணவர். அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சியைச் சேர்ந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (8.7.2025) தனது விடுதியின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மரணம் குறித்து வெளியான முதற்கட்ட விசாரணையில், விடுதி வளாகத்திலேயே மது அருந்தியதாகக் கூறி விடுதி வார்டன் அபிஷேக்கை கண்டித்ததாக கூறப்படும். மேலும், கல்லூரி கட்டணம் நிலுவையில் இருந்ததால் விடுதி காப்பாளர் அபிஷேக்கின் செல்போனை உடைத்ததாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, அவர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அபிஷேக் இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டநிலையில், மாணவரின் உடல் பரிசோதனைக்காக எம்ஜிஎம்ஹெச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அபிஷேக்கின் தந்தை வெங்கடேசன், விடுதி காப்பாளர் தனது மகனை சித்திரவதை செய்திருக்கலாம் எனவும், உறையூர் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.
ஆனால், புகாரை காவல் துறை ஏற்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து, அபிஷேக்கின் உறவினர்களும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாணவர்களும், விடுதி காப்பாளரை கைது செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.