சென்னை | பிரபல தியேட்டரில் காலாவதியான குளிர்பானம் விற்பனை.. அதிரடி சோதனையில் இறங்கிய அதிகாரிகள்!
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சுகாதாரமற்ற் முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானம்:
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நித்யா என்பவர் குடும்பத்துடன் நேற்று மாலை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளார். இதையடுத்து படத்தின் இடைவேளை நேரத்தில் தியேட்டர் கேண்டினில் குளிர்பானம் வாங்கி தனது குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். அப்போது அந்த குளிர்பானம் முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கேண்டின் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காலாவதியான குளிர்பானங்கள் என பெண் புகார்:
இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நித்யா, சில குளிர்பான பாட்டில்கள் சுகாதாரமற்ற முறையிலும் மது வாசனை அடிப்பது போன்றும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து எழும்பூர் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளார்
ஆல்பர்ட் தியேட்டர் நிர்வாகம் விளக்கம்:
இந்த நிலையில், ஆல்பர்ட் திரையரங்க கேண்டீன் நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், தாங்கள் தவறான பொருட்களை விற்பனை செய்திருந்தால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தாராளமாக ஆய்வு மேற்கொண்டு எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தனர்.
அதிரடியாக சோதனையில் இறங்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் தலைமையில் அதிகாரிகள் குழு அதிரடியாக ஆல்பர்ட் திரையரங்கு கேண்டினில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் குற்றம் சாட்டிய குளிர்பானங்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கூல்ட்ரிங்க்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் எசென்ஸ் பாட்டில்களை எடுத்து, அனுமதி இன்றி கூல்டிரிங்ஸ் தயாரித்தீர்களா? என்ற கேள்விகளை எழுப்பினர். மேலும், உணவுப் பொருட்களை சேர்த்து வைத்திருக்கும் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனையில் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்
அங்கு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பாப்கார்ன்கள், தேதி குறிப்பிடாத உணவுப் பொருட்கள் ஆகியவை ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதையும், பாப்கான்களில் பூஞ்சைகள் படர்ந்து கிடந்து இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்தப் பெண் குற்றம் சாட்டிய நூற்றுக்கணக்கான குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் பேட்டி:
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் கூறுகையில்... பிரபல திரையரங்கில் காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள் வைத்திருப்பது கண்டு அதிர்ச்சியாக உள்ளது. இந்த தியேட்டரில் கேண்டீன் நடத்தும் நிர்வாகத்திற்கு ஓராண்டு காலம் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்கள் கேட்கப்படும் குறிப்பாக பெண் குற்றம் சாட்டிய குளிர்பானம் தயாரிக்கும் கேரளா கண்ணூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்க இருக்கிறோம். சென்னை முழுவதும் உள்ள தியேட்டர்கள் மற்றும் மால்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் குறித்து அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.