“வேகமாக குணமடைகிறார்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து செல்வப்பெருந்தகை விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சேர்க்கப்பட்டார். 75 வயதாகும் அவருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். முன்னதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் மீண்டும் குணமடைந்து வருவார். வருகின்ற 9 ஆம் தேதி சட்டமன்றம் கூட இருக்கிறது. சட்டமன்றத்தில் அவர் குரலைக் கேட்ட ஆவலுடன் இருக்கிறோம். மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்புவார். மருத்துவர்களும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவருக்கு ஏற்கனவே பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டிருந்தது. இடையில் அவருக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் தற்போது சிகிச்சை அளித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து, நடைபெற்ற இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.