ஈரோடு | வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை விரட்டிக் கடித்த தெருநாய் - 5 பேர் காயம்
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி (7), சஸ்திகாஶ்ரீ (6), சஞ்சனா (11) மற்றும் பிரித்விகா ஆகிய நான்கு சிறுமிகளை கடித்துள்ளது.
அப்போது இளைஞர் மணிகண்டன் என்பவர் சிறுமிகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், மணிகண்டனையும் நாய் கடித்துள்ளது. இதைத் தொடர்ந்து குழந்தைகளில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் நாயை துரத்தி குழந்தைகளை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து காயம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், பவானி நகரில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிவது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.