"டாஸ்மாக் ஊழல்ல சிக்கிய அமைச்சர்தான் இப்போ கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்" - EPS

“ஒரு நாளுக்கு பத்து கோடி ஊழல் செய்த அரசாங்கம் திமுக அரசாங்கம். அதை மறுக்க முடியுமா?” - இபிஎஸ்

நேற்று (ஆக. 20, 2023) மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “அம்மா அவர்கள் இருந்தபொழுது இன்றைய 13 அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, வழக்கு நடந்து கொண்டிருந்தது. அந்த அமைச்சர்கள் எல்லோரும் 10, 13 ஆண்டு காலம் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கிகொண்டு இருந்தார்கள். இப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு மூன்று, நான்கு அமைச்சர்கள் இன்றைக்கு விடுதலை பெற்றிருக்கிறார்கள்.

நாங்கள் இதை சும்மா விட மாட்டோம். உச்சநீதிமன்றம் வரை சென்று இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம். அதுமட்டுமல்ல... தமிழ்நாட்டின் உயர்கல்வி துறை அமைச்சர் ஊழல் குற்றம்சாட்டபட்டு நீதிமன்றத்தில் விடுதலை அடைந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ‘விடுதலை வழங்கவில்லை - சந்தேகம் இருக்கின்றது மீண்டும் விசாரிக்க வேண்டும்’ என்றுதான் தீர்ப்பை கொடுத்திருக்கிறது.

எனவே ஸ்டாலின் அவர்களே.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ண வேண்டாம். உங்கள் கட்சியை காப்பாறிக்கொள்ளுங்கள். அது மட்டுமல்ல டாஸ்மாக்கில் பெரிய ஊழல் நடக்கிறது. டாஸ்மாக்குக்கு சென்று ஏழை எளிய மக்கள் மதுபானம் வாங்கினால் 1 பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன.

ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் எனில், ஒரு நாளுக்கு பத்து கோடி ஊழல் செய்த அரசாங்கம் திமுக அரசாங்கம். அதை மறுக்க முடியுமா? தமிழ்நாட்டில் 3,600 மதுபான கடைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் பல கடைகளில் இப்படி முறைகேடு நடப்பதாக கூறி, காவல்துறை அதிகாரிகளே ஆங்காங்கே அந்த கடைகளுக்கெல்லாம் சீல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியென்றால் அரசாங்கம், காவல் துறை அதிகாரிகளுக்குல்லாம் தெரிந்துதானே டாஸ்மாக்கில் ஊழல் நடந்து கொண்டு இருக்கிறது. இதன் வருமானமெல்லாம் மேலிடத்துக்குத்தான் போகிறது என்கிறார்கள். மேலிடம் என்றால் யார்? ஸ்டாலின்.

எடப்பாடி பழனிச்சாமி  , மு.க ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி , மு.க ஸ்டாலின் Twitter

முறைகேடாக விற்கப்படுகின்ற அந்த மதுபானங்கள் மதுபான ஆலையிலிருந்து நேரடியாக பாருக்கு செல்கிறது. வரி செலுத்தாமல் நேரடியாக ஒரு பாட்டிலுக்கு நூறு ரூபாய் வரை கிடைக்கிறதென்றால், மொத்தமாக பார்த்தால் பல்லாயிரகணக்காண கோடி ஊழல் இது!

அதுவெல்லாம் வெட்டு வெளிச்சத்திற்கு வரும். அதில் சிக்கிய ஒரு அமைச்சர்தான் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல அதிமுக அமைச்சர்களின் மீது பொய் வழக்கு போடுகிறீர்கள். அனைத்தையும் நீதிமன்றத்திற்கு சென்று சட்டரீதியாக வெல்வோம்.

நான் ஒரு சாதாரண தொண்டன். தொண்டன் போல இந்த கட்சியில் இருந்தால், எம்எல்ஏ ஆகலாம் எம்பி ஆகலாம் அமைச்சராகலாம்... ஏன் முதலமைச்சரே ஆகலாம். கிளைச்செயலாளராக இருந்து மாவட்ட பொறுப்புக்கு வந்து, மாநில பொறுப்புக்கு வந்து, இப்பொழுது கழக ஒட்டுமொத்த நிர்வாகிகளோடு கழகப்பொதுச்செயலாளராக வந்திருக்கிறேன். இதை வேறு எந்த கட்சியாவது கொடுக்க முடியுமா? அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு விசுவாசமாக இருக்கின்ற சாதாரண தொண்டன் கூட வெற்றி பெற்று ஆட்சிக்கு வர முடியும் அதுதான் அதிமுக!” என்று பேசினார்.

- Jenetta Roseline S

EPS
மதுரை ‘அதிமுக எழுச்சி மாநாடு’... இபிஎஸ் உரை! நேரலைக் காட்சிகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com