தமிழ்நாடு
கனமழை எதிரொலி - இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு
தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, சேலத்தில் நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு, டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், டிசம்பர் 24 ஆம் தேதிக்கு மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் முனைப்புடன் உள்ளனர்.
இந்த சூழலில் திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.