”தவெகவில் திமுகவினர் ஊடுருவியுள்ளனர்; ஆதவ்-ன் அஜெண்டா இது தான்” - சார்லஸ் மார்ட்டின் விளக்கம்!
புதுச்சேரி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடையவிருக்கிறது. இந்த சூழலில் தான், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் லட்சிய ஜனநாயகக் கட்சி என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. இக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். இதையொட்டி இன்று பழனி வந்த அவர், அடிவாரம் திருஆவினன்குடி கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் தனது வேட்புமனுவை வைத்துச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார். தொடர்ந்து கோவிலில் விளக்கேற்றிச் சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டார்.
பின்னர், சார்லஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”நாளை வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால் முருகனின் ஆசி பெற வந்துள்ளேன். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால், தமிழகத்தை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றி விடலாம் போலத் தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் தவெக குறித்துப் பேசிய அவர், "அரசியல் என்பது படம் எடுப்பது போன்றதல்ல; ஒரு வலுவான கூட்டணியில் இணையாமல் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை மட்டும் காட்டுவது வீண் செயல். விஜயின் கட்சிக்கு பின்னால் திமுக-வின் மறைமுகத் திட்டங்கள் இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது.
தவெகவில் திமுகவினர் ஊடுருவியுள்ளனர். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி போன்றோர் தவெக-வை யாருடனும் கூட்டணி வைக்க விடாமல் தடுக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆதவ் அர்ஜுனா தனது அஜெண்டாவைச் சரியாகச் செய்து வருகிறார். விஜய்யைத் தனியாக நிற்க வைத்துத் தோற்கடிப்பதே திமுக-வின் திட்டமாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

