திமுக முக்கிய புள்ளிகளுக்கு சிக்கல்? அமித்ஷா - பழனிசாமி போடும் ஸ்கெட்ச்!
அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக முக்கிய புள்ளிகள் மீது ஊழல் புகார்கள் குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், திமுகவுக்கு சிக்கல் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஜனவரி 4- ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வந்தபோது, அவரை சந்தித்து பேசுவதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்ததாகக் கூறப்பட்டது. ஆனால், டெல்லி திரும்பிய பிறகு, அங்கு சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதுபோல், இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி வந்து சென்றிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தற்கு 2 முக்கிய காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒன்று, திமுக முக்கிய புள்ளிகள் மீதான ஊழல்கள் புகார்கள் மீது கவனம் செலுத்த எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தபோது முக்கியமான 3 ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வேலை வாங்குவதற்கு பணம் கொடுத்தது, மணல் திருட்டு, டாஸ்மாக் ஊழல் ஆகியவற்றை அழுத்தமாக கூறியிருந்தார். இதனால், சம்மந்தப்பட்ட திமுக முக்கிய புள்ளிகளுக்கு சிக்கல் வருமா, இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்படுமா என்ற எதிர்பாப்ர்ப்பு எழுந்திருக்கிறது.
சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க முயற்சி?
அதேவேளையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு பாஜக மூலம் தொகுதிகளைப் பெறுவதற்காக 35 தொகுதிகளுக்கு மேல் பாஜக தலைவர்கள் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, ஐ.ஜே.கே, தமாகா, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மதுரையில் கூட்டணி தலைவர்கள் கூடி பேசியதில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பேசிய கூட்டணியின் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் தொகுதிப்பங்கீடு குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கின்றனர்.

