Cyclone Ditwah
Cyclone Ditwahx page

Ditwah Effect LIVE : 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருந்தாலும் கனமழையால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான செய்திகளை விரிவாகப் பார்க்கலாம்.

4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாவது எப்படி... அதன் வகைகள் என்ன?

புயல் என்ற சொல்லைக் கேட்டாலே மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்படுவது இயல்பு. புயல் எவ்வாறு உருவாகிறது? எதனால் உருவாகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...

Cyclone Ditwah
புயல் உருவாவது எப்படி... அதன் வகைகள் என்ன?

சென்னையில் மழை எவ்வளவு?

சென்னை எண்ணூரில் 9 மணி நேரத்தில் 19 செமீ மழை பதிவாகியுள்ளது. மணலியில் 16 செமீ, பாரிஸ் 15 செமீ, ஐஸ்அவுஸ் 14 செமீ, வடபழனி 13 செமீ என மழை பதிவாகியுள்ளது. கத்திவாக்கம் மற்றும் மேடவாக்கத்தில் தலா 12 செமீ மழையும் காசிமேட்டில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது,

மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

சென்னைக்கு கிழக்கே 50 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இன்று மாலை சென்னைக்கு மிக அருகே 30கிமீ தொலைவில் வடக்கு நோக்கி தாழ்வு மண்டலம் நகரும். அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்திருக்கிறார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நெருங்குகிறது என்றும் இதனால் சென்னையில் மழை தொடரும் என்றும் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்திருக்கிறார்.

திருவள்ளூரில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. ஏற்கனவே சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவள்ளூரிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் சென்னை முழுவதும் ஆங்காங்கு மழை இருந்த நிலையில், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குடைகளைப் பிடித்தபடி மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்குச் சென்றனர். இத்தகைய சூழலில் நாளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை மட்டுமல்லாமல் புறநகர் மாவட்டங்களிலும் கனமழை விட்டு விட்டு பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் சென்னைக்கும், திருவள்ளூருக்கும் வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை விடுத்திருந்தது. அதன் எதிரொலியாகவே சென்னையில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு சற்று நேரத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை நீரில் சிக்கிய கார்

காலை முதலே பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை வேலப்பன்சாவடி அருகே இருக்கக்கூடிய சர்வீஸ் சாலையில் காலை முதலே பெய்து வரும் கனமழை காரணமாக சர்வீஸ் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த சர்வீஸ் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரில் ஆபத்தை உணராமல் வந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. மேலும் கார் ஓட்டுநர் கார் எடுக்க முயற்சித்தும் முடியாத காரணத்தினால் மெல்ல மெல்ல காரானது மழை நீரில் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை விட்டு உயிர் பிழைக்கும் படி தப்பி ஓடிய சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தேங்கியிருக்கக் கூடிய மழை நீரில் வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பாக காவலர்கள் இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு முதலமைச்சரிடம் இருந்து உரிய இழப்பீடு தர முயற்சி செய்வேன்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சரிடம் இருந்து உரிய இழப்பீடு தர முயற்சி செய்வேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி.

தஞ்சாவூரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக எய்ட்ஸ் கட்டுப்பாடு விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஆட்டோக்களில் ஒட்டியும், கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோவி செழியன்
கோவி செழியன்கோப்புப்படம்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தது. ஆய்வு செய்துவிட்டு 15 நாட்களுக்கு பிறகு அதை நிராகரித்தது. எதற்கு அழைத்தோம் எதற்கு குழு வந்தது என்று தெரியவில்லை. ஒன்றிய அரசு தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றார்.

தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் துறையும் - வருவாய்த்துறையும் இயற்கை இடர்பாடுகள் குறித்து கணக்கிட்டு அதற்கான புள்ளி விவரங்களை முதலமைச்சருக்கு எடுத்துச் சென்றால், அந்த உதவியை பெற்று தர நானும் முயற்சிப்பேன் என தெரிவித்தார்.

குலசேகரன்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அண்ணாசாலை கீழத் தெருவை சேர்ந்தவர் முருகேசன். அவரது மனைவி ரேணுகா செல்வி. இவரது மகன் மணிகண்டன். மாற்றுத்திறனாளி மகனான மணிகண்டனுடன் அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இடிந்து விழுந்த வீடு
இடிந்து விழுந்த வீடு

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இவர்கள் வசித்து வந்த வீட்டின் ஒரு பக்க சுவர் நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் முருகேசன் மற்றும் அவரது மகன் மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மனைவி ரேணுகா செல்விக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அவர்களை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் கணக்கெடுப்பு

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியும் மழைநீர் சூழ்ந்தும் பாதிக்கப்பட்டிருந்தன . திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை தகவல் படி சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் இளம் பயிர்கள் மழை நீர் சூழ்ந்தும், மழை நீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டு இருந்தன. 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களிலும் வேளாண்மை துறை வட்டார உதவி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள். 60க்கும் மேற்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் ஒரு வாரத்திற்குள் கணக்கு எடுக்கும் பணி நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்

அதிகாரிகளைக் கடிந்து கொண்ட அமைச்சர்

டிட்வா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. இதில் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடம் மூலம் அரசு சார்பில் உணவு வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். ஆனால் பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் சமையல் கூட பகுதிக்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கிருந்த அரசு அதிகாரிகளை கடுமையாக கேள்வி எழுப்பினார். மேலும், "முதலமைச்சருக்கு போன் பண்ணுகிறேன்.. நீங்களே பேசுங்க.. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவின்றி தவித்து வரும் நிலையில் அலட்சியமாக இருப்பது ஏன்?" என்று அவர்கள் கடிந்து கொண்டார்.

காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஒரு கோடி ரூபாய் நிதி புதுச்சேரி அரசு ஒதுக்கி விட்டது. அந்த நிதியை கொண்டு காரைக்கால் மக்களுக்கு முழுமைக்கும் உணவு வழங்க வேண்டும். ஆனால், "மூன்று மணி நேரமாக மக்கள் உணவுக்காக காத்திருக்க வேண்டுமா..? சாப்பாட்டுக்காக மக்கள் வரிசையில் நின்று அடித்துக் கொள்ள வேண்டுமா..? அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறீர்களா..? எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. உடனே சமையல ஆரம்பிங்க" என்று அதிகாரியை கடுமையாக திட்டினார். இந்த நிலையில் இது குறித்தான வீடியோ காரைக்கால் முழுவதும் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

திருவள்ளூர்: பல்வேறு பகுதிகளில் மழை

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு அது திரும்ப பெறப்பட்டிருந்தது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால், மாணவர்கள் மழையில் நனைந்தபடி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

7 மாவட்டங்களில் மழை தொடரும்

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோட்டில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

காவிரிப் படுகை மாவட்டங்களில் பயிர்கள் சேதம்

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விளைநிலங்கள்
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விளைநிலங்கள்

தொடர் கனமழையால், காவிரி படுகை மாவட்டங்களில் இரண்டரை லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால், நாகையில் 82 ஆயிரம் ஏக்கர் பயிர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. திருவாரூரில் 48 ஆயிரம் ஏக்கர் பயிர்களும், தஞ்சையில் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் நீரில் மூழ்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், புதுக்கோட்டையில் 10 ஆயிரம் ஏக்கரும், காரைக்காலில் 11 ஆயிரம் ஏக்கரும் நீரில் மூழ்கி உள்ளன. விளைநிலங்களில் நீர் தேங்கி உள்ளதால், பயிர்கள் முற்றிலும் அழுகி வீணாகும் நிலை உள்ளது.

இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், பயிர் சேதங்களை நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே விவசாய சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com