நிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி

நிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி
நிவர் புயல் Live Updates: உயிர் சேதம் குறைவு, பொருட் சேதம் இல்லை - முதல்வர் பேட்டி

நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள், மீட்பு - நிவாரண நடவடிக்கைகளை உள்ளடக்கிய லைவ் அப்டேட்ஸ் இங்கே... 

நவ.26,2020 | காலை 5:58 மணி : கடலூரில், நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும் போது, “அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை.
கடலூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன. பயிர் சேதம் எவ்வளவு என்பது முழுமையான ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும்.

நிவர் புயல் காரணமாக 321 மரங்கள் விழுந்த நிலையில் அவையனைத்தும் அகற்றப்பட்டன. 77 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும். காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகை வழங்கப்படும். அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்சேதம் தடுக்கப்பட்டது. உயிரிழப்பை தவிர்க்க மழை நீர் முழுவதும் வடிந்தவுடன் மின் விநியோகம் தொடங்கப்படும்.

நவ.26,2020 | காலை 4:52 மணி :  தெற்கு வங்கக் கடலில் வரும் 29 ஆம் தேதி புதியக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடைந்து தென் தமிழகத்தை நோக்கி நகரும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நவ.26,2020 | காலை 4:37 மணி : நிவர் புயல் காரணமாக, சென்னையில் பெய்த கனமழையால் முடிச்சூர் பகுதியானது கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. 

நவ.26,2020 | காலை 4:18 மணி:  புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். விரிவாக படிக்க >> https://bit.ly/33gYrFe

நவ.26,2020 | காலை 4:07 மணி: கடலூர் துறைமுகப்பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு வருகிறார்.

நவ.26,2020 | காலை 4:05 மணி:  நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வரும் எடப்பாடி பழனிசாமியிடம் மக்கள் தங்களது குறைகளை தெரிவித்து வருகின்றனர். 

நவ.26,2020 | காலை 3:50 மணி: இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைசசர் தங்கமணி கூறியதாவது ”மழை நீர் வடிந்த பின்னர் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்படும். மின் கம்பங்களை சீரமைக்கும் பணியானது 20 சதவீதம் முடிவடைந்து விட்டன. இரவுக்குள் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விடும். விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் 144 மின் கம்பங்கள் விழுந்துள்ளன” என்றார். 

நவ.26,2020 | காலை 3:33 மணி: நிவர் புயலையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வரும் நிலையில் ஆபத்தை அறியாமல் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் செல்ஃபி எடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக படிக்க >> https://bit.ly/3mb81Rz

நவ.26,2020 | காலை 2:49 மணி: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு வருகிறார். 

நவ.26,2020 | காலை 1.18 மணி:  நிவர் புயல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவையானது இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து தொடங்குகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகியப் பகுதிகளுக்கு இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து ரயில் சேவை தொடங்குகிறது. 3 மணியிலிருந்து 8 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கடலூரை புரட்டிப்போட்ட ‘நிவர்’... மீளாத்துயரில் விவசாயிகள்...

நவ.26,2020 | காலை 1.18 மணி:  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் ஒட்டிய வரதராஜபுரம் பகுதி மக்களை படகு மூலம் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.  

நவ.26,2020 | காலை 1.18 மணி: "நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 3 பேர் காயம் அடைந்துள்ளனர். 101 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. புயலின் காரணமாக வீழ்ந்த 380 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன" என்று தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

வேலூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை...

நவ.26,2020 | காலை 12.29மணி : நிவர் புயலானது தற்போது புதுச்சேரியிலிருந்து 85 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் அதிதீவிர புயலில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்துள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - யாரும் அச்சப்பட வேண்டாம்: ககன்தீப் சிங் பேடி...

நவ.26,2020 | காலை 12.04 மணி : சென்னையின் மழை  விவரங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வழக்கமாக வடக்கிழக்கு பருவமழையின் போது நமக்கு 80 செ.மீ மழை கிடைக்கும். இந்த மழையானது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் மழையிலிருந்து கிடைக்கும். நிவர் புயலின் தாக்கத்தால் நமக்கு தற்போதே 55 செ.மீ மழையானது கிடைத்துள்ளது. 36 மணி நேரத்தில் 23 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது. சென்னையை ஒட்டியப் பகுதிகளில் நகரத்தை  விட அதிகளவு கனமழை பெய்துள்ளது. குறிப்பாக தாம்பரத்தில் 30 செ.மீக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது” என்றார். 

மேலும் பேசிய அவர் “2015 ஆம் ஆண்டு 1000 புகார்கள் வந்தன. தற்போது 56 புகார்கள் மட்டுமே வந்துள்ளன. நில அமைப்பின் காரணமாக தேங்கிய நீரானது இரண்டு மணி நேரத்தில் வடிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் கொரோனா சோதனைகள் அதே அளவில் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது என்பதற்காக சோதனைகள் குறைக்கப்படவில்லை" என்றார். 

இரவு 11.30 முதல் அதிகாலை 2.30 வரை கரையை கடந்த நிவர் புயல்! - திக் திக் நிமிடங்கள்...

நவ.26,2020 | காலை 11.40 மணி: புதுச்சேரி மாநில நிலவரம் : நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி முதல்வர் வி. நாரயணசுவாமி பார்வையிட்டார்.

அவர் கூறியதாவது “ 24 மணி நேரத்தில் 23 செ.மீ மழை பெய்துள்ளது. உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இது போன்ற மழையை நாங்கள் கண்டதில்லை. மின் இணைப்பு இயல்பு நிலைக்குத் திரும்ப 12 மணி நேரம் ஆகும்” என்றார்.

நவ.26,2020 | காலை 11.33 மணி நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வரும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். 

நவ.26,2020 | காலை 11.28 மணி : செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவானது விநாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் - விரிவான தகவல்...

நவ.26,2020 | காலை 10.56மணி: சென்னையில் நிவர் புயல் காரணமாக நேற்று மாலை நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவையானது இன்று மதியம் 12 முதல்  இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஊரப்பாக்கம் அருகே ஏரி நீர் ஊருக்குக்குள் புகுந்தது - வீடியோ காட்சி...

நவ.26,2020 | காலை 10.56மணி: நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் கேட்டறிந்தார். இரண்டு மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு பேசிய அமித் ஷா மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்துள்ளார். 

நவ.26,2020 | காலை 10.54மணி:  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 ஆம் தேதி 1 மணி முதல் பேருந்து சேவையானது நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த மாவட்டங்களில் பேருந்து சேவையானது இன்று நண்பகல் 12 மணி முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவ.26,2020 | காலை 10.48 மணி: நிவர் புயல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவையானது நண்பகல் 12 மணி முதல் இயங்கும். 

நவ.26,2020 | காலை 10.40 மணி: புயல் பாதித்தப் பகுதிகளை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அவரிடம் மக்கள் தங்களது குறைகளை கூறி வருகின்றனர். 

பூம்புகார் துறைமுகப் பகுதியில் கன மழை பாதிப்பு காட்சிகள்...

நவ.26,2020 | காலை 10.30 மணி: சென்னையில் மாநகரப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. நகரின் உட்பகுதியில் லேசான தூறலுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காற்று மிதமான வேகத்தில் வீசுகிறது.


நிவர் புயல் காரணமாக, சென்னையில் நிறுத்திவைக்கப்பட்ட விமானப் போக்குவரத்து 14 மணி நேரத்துக்குப் பிறகு, காலை 9 மணியில் இருந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.

நவ.26,2020 | காலை 10.23 மணி: புதுச்சேரி ரெயின்போ காலனி அருகே உள்ள செட்டித் தெருவில் வீடுகள் மற்றும் கடைகள் உள்ள அப்பார்ட்மென்ட் மீது பழமையான மரம் ஒன்று சாய்ந்து கிடக்கிறது. இதனை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நவ.26,2020 | காலை 10.05 மணி: காஞ்சிபுரத்தில் நிவர் புயல் தாக்கத்தால், 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

2015 போன்றே தற்போதும் பாதிப்பை சந்தித்த மேற்கு தாம்பரம்...

நவ.26,2020 | காலை 09.34 மணி: புயல் கரையைக் கடந்த பிறகு நடக்கக்கூடியவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதையொட்டிய பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்...

நவ.26,2020 | காலை 09.30 மணி: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி.

சென்னை ஆதம்பாக்கம் சில பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்...

நவ.26,2020 | காலை 09.25 மணி:  ஆந்திரா பிச்சாட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டதால் திருவள்ளூர் ஆரணி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவ.26,2020 | காலை 08.35 மணி: நிவர் புயலானது புதுச்சேரியில் இருந்து 50கிமீ வடமேற்கு நிலப்பகுதியில் நிலைகொண்டுள்ளது. தற்போது தீவிர புயலாக உள்ள நிவர், அடுத்த 3 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் மழை பெய்துகொண்டே இருக்கிறது.

புதுச்சேரியில் இருந்து நம் செய்தியாளர் எல்லுச்சாமி கார்த்திக்கின் லைவ் வீடியோ அப்டேட்ஸ்...

நவ.26,2020 | காலை 07.05 மணி:  தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூரில் சுமார் 10ஆயிரம் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. தரைத்தளம் வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். விரிவான செய்திக்கு > வெள்ளக்காடு.. தரைத்தளம் வரை தண்ணீர்... வீடுகளிலேயே முடங்கிய முடிச்சூர் மக்கள்!

நிவர் புயலால் புதுச்சேரி பகுதியின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. | புகைப்படங்கள்: எள்ளுச்சாமி

புதுச்சேரியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. மேலும் மழையும் பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாய்ந்துள்ள மரங்களை போலீசாரின் உதவியுடன் பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

புகைப்படங்கள்: எல்லுச்சாமி கார்த்திக் (செய்தியாளர்)

கல்பாக்கம் சுற்றுப் பகுதிகளில் பாதிப்புகள் குறைவு என்பதால் பொதுமக்கள் நிம்மதி...

நவ.26,2020 | அதிகாலை 06.04மணி: வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது நேற்று இரவு 11.30 முதல் இன்று அதிகாலை 2.30க்குள் கரையை கடந்தது. நிவர் புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட தகவல்கள்...

நவ.26,2020 | அதிகாலை 04.04மணி: நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது. அதன்பின்னர், மையப்பகுதி கடந்து கொண்டிருக்கும்போது அதி தீவிர புயல் தீவிரப் புயலாக வலுவிழந்தது. பின்னர், தீவிர புயலாகவே நிவர் புயல் முழுவதும் கரையை கடந்துள்ளது. இத்தகவலை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். தீவிர புயலாக இருக்கும் நிவர், ஆறு மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவ.26,2020 | அதிகாலை 03.40 மணி: நிவர் புயலின் மையப்பகுதி இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை கரையை கடந்துள்ளது. தற்போது புயலின் பின்பகுதி கரையை கடந்து வருகிறது.

நவ.26,2020 | அதிகாலை 03.19 மணி: அதிதீவிர புயலாக கரையை கடந்து வந்த நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.26,2020 | அதிகாலை 03.10 மணி: நிவர் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புயலின் மையப்பகுதி 25 சதவீதத்திற்கு மேல் கடந்துள்ள நிலையில் மிகவும் தாமதமாக நகர்ந்து வருகிறது. இந்த புயல் முழுவதும் கடக்க இன்னும் 3 முதல் 4 மணிநேரம் கூட ஆகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாமதத்தினால் புயல் வலுவிழக்காதது எனவும் தாமதத்திற்கு காரணம் புயல் கரையை கடக்கும் திசைக்கு எதிரே காற்று வீசுவதால் தாமதம் ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

நவ.26,2020 | அதிகாலை 03.00 மணி: இதுவரை விஷயங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன : 3 மணிக்கு வீடியோ வெளியிட்ட கிரண்பேடி

நவ.26,2020 | நள்ளிரவு 02.44 மணி: நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரை, சாந்தோம், அடையாறு, பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

நவ.26,2020 | நள்ளிரவு 02.25 மணி: நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு வடக்கே 25 கி.மீ தொலைவில் கரையை கடந்து வருகிறது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவ.26,2020 | நள்ளிரவு 01.50 மணி: புதுச்சேரியில் இருந்து வடக்கே 25 கி.மீ தூரத்தில் நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருகிறது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் 16 கி.மீ வேகத்தில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. இதனால் கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

நவ.26,2020 | நள்ளிரவு 01.09 மணி: புதுச்சேரிக்கு அருகே நிவர் புயர் கரையை கடந்து வரும் நிலையில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல இடங்களில் சூறைக்காற்றால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவ.26,2020 | நள்ளிரவு 01.00 மணி: நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடந்து வருவதை தொடர்ந்து சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. சில மணி நேரங்களாக சென்னையி மழை இல்லாத நிலையில் பலத்த காற்று வீசி வருகிறது.

நவ.26,2020 | நள்ளிரவு 12.58 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் வெளியேற்றம் 9000 கன அடியில் இருந்து 7000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 8,436 கன அடியாக இருப்பதால் நீர் வெளியேற்றம் 2000 கன அடி குறைக்கப்பட்டுள்ளது.

நவ.26,2020 | நள்ளிரவு 12.51 மணி: அதிதீவிர புயலான நிவர் புயலின் முன்பகுதி புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் கரையை கடந்து வருகிறது. இன்னும் 2 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரிலிருந்து 40 கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து 110 கி.மீ தூரத்திலும் புயல் கரையை கடந்து வருகிறது.

நவ.26,2020 | நள்ளிரவு 12.42 மணி: நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே 15 கி.மீ வேகத்தில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் கடலூர், புதுச்சேரியில் அதீத கனமழை பெய்து வருகிறது. கடலூரில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுவரை கடலூரில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பொதுவிடுமுறையிலும் அதிகாரிகள் வேலைப்பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.26,2020 | நள்ளிரவு 12.31 மணி: நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகு பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நவ.26,2020 | நள்ளிரவு 12.16 மணி: புதுச்சேரிக்கு வடக்கே புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என கணிக்கப்படுள்ளது. தற்போது புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகிறது. இதனால் கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 120 லிருந்து 145 கி.மீ வரை காற்று வேகமாக வீசி வருகிறது.

> நிவர் புயல் தொடர்பான முந்தைய லைவ் அப்டேட்ஸ் இங்கே > நிவர் புயல் Updates: நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்தது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com