கோவை | தனியார் மருத்துவக் கல்லூரி கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி – போலீசார் விசாரணை
செய்தியாளர்: சுதீஷ்
கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பிரபல பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பவபூரணி (28), என்பவர் மயக்கவியல் துறையில் முதுகலை படித்து வந்தார். இதற்காக அவர் அந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இதையடுத்து விடுதி வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்ற அந்த மாணவி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவருடைய அறையில் தங்கி இருந்த மாணவிகள் கழிவறை கதவை தட்டிப் பார்த்துள்ளனர். பலமுறை தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று கழிவறை கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கு அந்த மாணவி சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவர்கள் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.