\
vijay, stalin
vijay, stalinpt

காவலர்களுக்கான முதல்வர் பதக்கம்.. சான்றிதழில் ஸ்டாலின் பெயர்..! சர்ச்சையான விவகாரம்.. நடந்தது என்ன?

காவலர்களுக்கான முதல்வர் பதக்கம் வழங்கிய நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் பெயரில் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

சென்னை எழும்பூரில் 300 காவலர்களுக்கு வழங்கப்பட்ட முதல்வர் பதக்க விழாவில், சான்றிதழ்களில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு முன் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களை கவனக்குறைவால் பயன்படுத்தியதாக உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள ராஜரத்தின மைதானத்தில் இன்று காலை 300 காவல்துறையினருக்கு "முதல்வர் பதக்கம்" வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பதக்கத்துடன் முதல்வர் சான்றிதழும் அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், முதல்வர் பதக்கம் அளிக்கப்பட்ட காவலர்களுக்கு வழங்கிய சான்றிதழில் முன்னாள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கையெழுத்து அச்சிடப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

காவலர்கள்
காவலர்கள்

இதனை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துப் போயினர். இதனையடுத்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டிய நிலையில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் பதக்கம் மட்டுமே வழங்கியுள்ளார். பின்னர் சான்றிதழ்கள் அனைத்தும் அலுவலகம் அனுப்பப்பட்டு அங்கிருந்து காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசிய போது, தேர்தலுக்கு முன்பாகவே சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டதால் அதனை அப்படியே பயன்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். முறைப்படி தற்போதைய முதல்வர் கையெழுத்து போடப்பட்டு சான்றிதழ் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் கவனக்குறைவு காரணமாக இத்தகைய தவறு நடந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்னும் சில தினங்களில் மேலும், 330 காவல்துறையினருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட உள்ளதாகவும் அதில் மாற்றம் செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com