தரக்குறைவான உணவு.. உணவகத்துக்கும் ஜொமாட்டோவிற்கும் 30,000 அபராதம்!
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி. இவர் வேளச்சேரியில் உள்ள அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸில் ஜொமாட்டோ மூலம் அசைவு உணவு ஆர்டர் செய்துள்ளார்.
அந்த உணவை சாப்பிட்ட பிறகு ஜெகபிரபுக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல், தலைச் சுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டநிலையில், இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையில் புகாரளித்தார்.
இதனால், அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவது தெரியவந்தது.
இந்த சூழலில் ஜெகபிரபு தனக்கு 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகம் மற்றும் ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம் இணைந்து பாதிக்கப்பட்ட ஜெகபிரபுவுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவாக 5,000 ரூபாய் என மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது.