நாகை: கனமழையால் இடிந்து விழுந்த பக்கவாட்டு சுவர்... 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
செய்தியாளர் விஷ்ணுவர்தன்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்த முருகதாஸ் என்பவரது மகன் கவியழகன். இவர் செம்பியன்மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம்வகுப்பு படித்து வருகிறார். முருகதாஸ் கூரை வீட்டில் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று அதிகாலை முதலே அப்பகுதியில் பல்வேறு இடங்களில் சாரல் மழையாகவும், கனமழையாகவும் மழைப் பொழிவு இருந்தது. இதற்கிடையே நேற்றிரவு முருகதாஸ் குடும்பத்தினர் தங்களது கூரைவீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய முருகதாஸ் குடும்பத்தினரை அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.
இதில் கவியழகன் பலத்த காயமடைந்திருந்தார். அவரை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கவியழகன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதேநேரம் அவரது தந்தை மற்றும் தங்கை சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.