நட்சத்திரத் தொகுதி | செந்தில் பாலாஜியின் புதிய களம்.. கோவை தெற்கில் எகிறும் எதிர்பார்ப்பு!
கரூரில் இருந்தபடி கொங்குமண்டல திமுகவின் தளபதியாக பணியாற்றிய செந்தில் பாலாஜி, இம்முறை கோவைக்கு மாறியிருப்பதால், கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாகியிருக்கிறது. செந்தில் பாலாஜியோடு நீண்ட காலம் பிணைப்பில் இருந்த தொகுதி என்றால், அது கரூரிலுள்ள கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள்தான். கரூரில் 3 முறையும், அரவக்குறிச்சியில் 2 முறையும் போட்டியிட்டு வெற்றியையும் பெற்றுள்ளார் அவர்.
இந்த முறை கொங்கு மண்டலத்தின் இதயமாகக் கருதப்படும் கோவையில், திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் முனைப்போடு அவர் கால் பதித்திருக்கிறார். 2011இல் உருவான கோவை தெற்கில், இதுவரை நடைபெற்ற 3 தேர்தல்களில் 2 முறை அதிமுகவும், ஒரு முறை பாஜகவும் வென்றுள்ளது. 2021 தேர்தலில், இங்கு பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிட்டபோது, அவர் பெற்ற வாக்குகள் 53,209. மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் பெற்ற வாக்குகள் 51,481. வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார்.
ஆனால், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் செந்தில் பாலாஜியின் வியூகத்தால், கோவையில் 100இல் 96 வார்டுகளை கைப்பற்றி திமுக சாதனை படைத்தது. தெலுங்கு பேசும் மக்கள், சிறு தொழில் புரிவோர், சிறுபான்மையினர் மற்றும் வடமாநிலத்தவர்கள் மிகுந்த தொகுதி கோவை தெற்கு. மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில் எனப் பல அடையாளங்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், இன்றைக்கு கிட்டத்தட்ட 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 10 இடங்களில் பேருந்து நிழற்குடை, 7 இடங்களில் ஆழ்துளை கிணறு உள்ளிட்டவற்றை தொகுதிக்கு செய்திருக்கிறார் வானதி சீனிவாசன். போக்குவரத்து நெரிசல், தங்கநகை தொழிலாளர்களின் பிரச்சினைகளும் தொகுதியில் சவாலாக உள்ளன.
"கரூரில் 100 சதவிகிதம் வெற்றியை உறுதி செய்துவிட்டதால்தான் செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பி உள்ளேன்" என முதல்வர் ஸ்டாலினே முழங்கியிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு, கோவை தெற்கில் சுழன்றுவருகிறார் செந்தில் பாலாஜி. இந்த முறை செந்தில் பாலாஜியை எதிர்த்து அதிமுக சார்பில் 2016இல் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அம்மன் அர்ஜுனன் மீண்டும் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளனோடு, தவெக சார்பில் செந்தில்குமாரும் கால் பதித்திருப்பது கோவை தெற்கு களத்தைக் கூடுதல் வெப்பத்தில் தள்ளியிருக்கிறது!

