முதல்வர் செய்த ஒரு சைகை.. ஆதரவாளர்களே எதிர்ப்பு.. CM விஜயின் ரியாக்ஷன் என்ன?
செய்தியாளர் - கார்த்திகேயன்
காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆவேசமாக பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், தங்களது எந்தவொரு விமர்சனத்திற்கும் பதில் அளிக்காமல், மிசா விவகாரத்தையே திமுகவினர் முன்னிறுத்துவதாக தெரிவித்தார். மேலும், அந்த மிசாவை பற்றி தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் தெரிவித்த முதல்வர், தனது தாடையில் கை வைத்தபடி, சைகை ஒன்றை, சட்டசபையில் வெளிப்படுத்தியிருந்தார்.
இது, மிசா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் இருந்தது என்று பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக வெற்றிக் கழக அரசு அமைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகமே, முதலமைச்சர் விஜயின் இந்த சைகைக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
உருவக்கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயல் என்றும் விமர்சித்திருந்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் பதிலாக, வெறும் கூச்சல்தான் சட்டமன்றத்தில் உள்ளது. இதனால், சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. அத்துடன் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும் கூறியிருந்தார்.
இவ்வாறு தொடர் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சட்டமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின்போது, நான் வெளிப்படுத்திய உடல்மொழி என்பது எதேச்சையானதுதான். அது எந்தவொரு வகையிலும் உள்நோக்கம் கொண்டது கிடையாது. தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் செயலாக அதை அர்த்தம்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

