கோவை|ஜி.டி நாயுடு மேம்பாலத்தைத் திறந்துவைத்த முதல்வர்.. சிறப்புகள் என்ன?
கோவை மாவட்ட மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த அவிநாசி சாலை மேம்பாலத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், இந்தப் பாலத்திற்கு ’ஜி.டி.நாயுடு மேம்பாலம்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் பாலத்தின் சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களைப் பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் தொழில் மற்றும் கல்வி மையமாக கோவை வேகமாக வளர்ந்துவரும் நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கியமான அடிக்கோடாக அவிநாசி சாலை மேம்பாலம் உருவாகியுள்ளது. கோவையின் புதிய அடையாளமாக மாறும் இந்த மேம்பாலத்திற்குப் புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டது.
மேம்பாலம் திறப்பு..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கான இன்று காலை சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்றார். பின்னர், முதற்கட்டமாக கொடிசியாவில் நடைபெறும் ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, 39 நாடுகளைச் சேர்ந்த, 264 பிரதிநிதிகள் பங்கேற்கும் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, உப்பிலிப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்துவைத்தார். பின்னர், பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்றார். இதைத் தொடர்ந்து, சிட்கோ தொழிற்பேட்டை குறிச்சி வளாகத்தில் 126 கோடி ரூபாயில் அமையவுள்ள தங்க நகைப் பூங்காவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தின் மூலம் கோவை மாநகரில் பரபரப்பாக உள்ள அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தின் சிறப்புகள்
2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு, 1,791 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமானாலும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வேகமாக முன்னெடுக்கப்பட்டு தற்போது முழுமை பெற்றுள்ளது. மேம்பாலம் Precast segmental box girder என்ற நவீன பொறியியல் முறையில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, பின் பாலத்தில் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்த நீளம் 10.1 கிலோமீட்டர், அகலம் 17.25 மீட்டர்; 1,124 ஆழ்துளைகள் அமைக்கப்பட்டுள்ளன. 8 ஏறு-இறங்கு தளங்களும், ஹோப்ஸ் - மருத்துவக்கல்லூரி இடையிலான ரயில் பாதை பகுதியைத் தாண்ட 52 மீட்டர் நீளமும் 725 டன் எடையும் கொண்ட சிறப்பு ரயில்வே கர்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய உயர்மட்ட பாலம் என்ற பெருமையை பெறும் அவிநாசி மேம்பாலம், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய தொழில் மாவட்டங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும். குறிப்பாக கோவை நகர மையத்திலிருந்து விமான நிலையம் செல்லும் பயணம் வழக்கமாக 45 நிமிடங்கள் எடுக்கும் நிலையில், இனி அது 10 நிமிடங்களுக்குள் குறையும். வணிகம், தொழில், கல்வி, மருத்துவம், சுற்றுலா என பல துறைகளுக்கும் புதிய உயிர் ஊட்டும் வகையில் மேம்பாலம் உருவாகியுள்ளது.