சிவகங்கை |அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்!
சிவகங்கை அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பொய்யா வயல் அரசு உயர் நிலைப்பள்ளியில், சக்தி சோமையா என்பவர் 9 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்தநிலையில், ஆசிரியர் அறிவுறுத்தலின் பேரில் கணினியை ஆன் செய்ய முயன்றபோது, மின்சாரம் தாக்கி சக்தி சோமையா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மாணவனின் உடல் பிரதே பரிசோதனைக்காக காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மருத்துவமனை முன் திரண்ட மாணவனின் உறவினர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய தேவக்கோட்டை சார்பு ஆட்சியர், பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்படுவார் என உறுதியளித்தார். அரசு இழப்பீடு மற்றும் சிறுவனின் மூத்த சகோதரிக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே, உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.