சென்னையில் கட்சி நிர்வாகியின் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
திருமண நிகழ்வில் பேசிய முதலமைச்சர், “ஒருநாள் முழுக்க விடாமல் மழை பெய்யும் என்றெல்லாம் எச்சரிக்கை செய்யவில்லை. எச்சரிக்கை செய்ததையெல்லாம் மீறி 47 வருடம் காணாத கனமழையைப் பாத்தோம். திமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி.
2015 ஆம் ஆண்டு ஒரு வெள்ளம் வந்தது. அப்போது அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அப்போதும் எச்சரிக்கை விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்ப விடக்கூடாது. அப்படி ஒரு சூழல் வந்தால் கொஞ்சமாக தண்ணீரை திறந்துவிட்டால் தான் வெள்ளத்தை, ஆபத்தை தடுக்க முடியும்.
அப்படி திறந்துவிடுவதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அனுமதி வாங்கக்கூட அதிகாரிகள் பயந்தனர். அனுமதி கேட்டு உரியபடி திறந்துவிட்டிருந்தார்கள் எனில் அவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்காது. நூற்றுக்கணக்கானவர்களை அன்று நாம் இழந்தோம். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டது.
ஆனால் அதைவிட ஒரு மோசமான நிலையில் வரலாறு பார்க்காத மழை தற்போது ஏற்பட்டது. அந்த சூழலிலும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிட்டு சென்னை சந்திக்க வேண்டிய பெரும்வெள்ளத்தில் இருந்து மீட்ட அரசுதான் திமுக.
இப்போது வந்த வெள்ளத்தில் அரசு மேற்கொண்ட நிவாரணப்பணிகள் உங்களுக்குத் தெரியும். அதற்கு ஈடாக 2015 ஆம் ஆண்டும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட கட்சி திமுகதான். ஒன்றியத்தில் இருந்து வந்தவர்கள் கூட வெள்ளத்தை திறமையாக அரசு கையாண்டுள்ளது என பாராட்டுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.