சென்னை | தனியார் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்த இளைஞர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர், வண்டலூரில் உள்ள கிரசன்ட் கல்லூரியில் ஓட்டுநராக பணி செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு சென்ற இவரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிளாம்பாக்கம் போலீசார், விசாரணை செய்தனர்.
இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிகண்டனின் சடலத்தைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.
இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலை செய்தது யார், என்ன காரணம் என்பது குறித்து கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

