சென்னை | விபரீத முடிவெடுத்த மேற்கு வங்க தம்பதியர் - பல கோணங்களில் போலீசார் விசாரணை
சென்னை பெரியமேடு கோவளம் முத்து கிராமணி தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளம் தம்பதியர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாக தம்பதி அறைக் கதவு திறக்காததால் ரூம் பாய் உசேன் தட்டிய போதும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனைவி வாயில் நுரை தள்ளியவாறு உயிரிழந்து கிடந்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்தவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியரான ரித்திக் காயல் (23), தஸ்மீரா காதுன் (23) என்பது தெரிய வந்தது. இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் வாரத்திற்கு ஒருமுறை இந்த தனியார் விடுதியில் தங்கி இருப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால், இருவரும் சண்டையிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
குழந்தையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.