சென்னை | விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் புனிதா. கூலி வேலை செய்து வரும் இவருக்கு 8 வயதில் மகனும், ஜனனி (5) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு சிறுமி ஜனனி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்தப் பகுதியில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியை பல இடங்களில் கடித்துக் குதறியுள்ளது.
இதையடுத்து உடனடியாக சிறுமியை மீட்ட அவரது தாயார், எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நாய் தொடர்ந்து கடித்து வருவதாகவும், தாங்கள் ஏற்கனவே புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், உடனடியாக நாய்கள் பிரச்னையில் அரசு தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.