சென்னை | போலியாக வழங்கப்பட்ட TC... பள்ளி மாணவர் மாயம் - பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சுப்பிரமணிய பாரதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிவர்ஷன் (14). இவர், அனகாபுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் தொடர்ந்து அவரின் நடவடிக்கைகள் சரியில்லாததாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் மாணவரை தொடர்ந்து கண்டித்து வந்தது.
நேற்றும் இதுபோல் அவரது நடவடிக்கை சரியில்லாததால் மாணவரை அழைத்து ஆசிரியர்கள் உனக்கு டிசி கொடுக்கிறோம் என போலியாக ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்துள்ளனர். இதனால் பயந்து போன மாணவன் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் செல்லாமல் மாயமாகி உள்ளார். இது குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே 50க்கும் மேற்பட்ட மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.