சென்னை | கடன் தொல்லை காரணமாக மருத்துவர் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன் (53). இவர், அண்ணா நகர் 13வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சுமதி (47) என்ற மனைவியும், ஜஸ்வந்த் குமார் (19) மற்றும் லிங்கேஷ்குமார் (17) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மருத்துவரான பாலமுருகன், அண்ணாநகர் மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் நான்கு ஸ்கேன் சென்டர்களை நடத்தி வந்துள்ளார்.
சென்னையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த மருத்துவர்:
இவரது மனைவி சுமதி உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், குடும்ப வேலைப்பளுவால் சமீப காலமாக நீதிமன்றத்திற்கு செல்வதில்லை என கூறப்படுகிறது. இவர்கள் சென்னையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில் இவருக்கு கொளத்தூரில் சொந்த வீடு உள்ளது. இந்த நிலையில்இவரது வீட்டில் பணிபுரியும் ரேவதி என்பவருக்கு நேற்று இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருந்து வாங்க மருத்துவர் பாலமுருகனுக்கு பலமுறை போன் செய்துள்ளார்.
குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை:
ஆனால், அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த ரேவதி, இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். கதவை திறக்காததால் உடனடியாக மருத்துவரின் டிரைவர் ராமச்சந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் ராமச்சந்திரன், குடியிருப்பு காவலாளி ஜெயராமன், பணிப்பெண் ரேவதி ஆகிய மூவரும் இணைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடன் தொல்லை காரணமா?
இது குறித்து தகவளின் பேரில் திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நான்கு உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மருத்துவர் பாலமுருகன் ஸ்கேன் சென்டர் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் அதனை விரிவு படுத்துவதற்காக 5 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி மற்றும் வெளியில் கடன் வாங்கியதாக தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்:
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பிசினஸ் டெவலப் ஆகாததால் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் பாலமுருகன் தவித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாலமுருகன், மனைவி சுமதியிடம் பலமுறை புலம்பி அழுததாக தெரியவந்துள்ளது. மேலும் கடன் கொடுத்தோர் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் நேற்று இரவு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
பாலமுருகனை வீட்டிற்கு வந்து மிரட்டியவர்கள் யார்? என அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ச்சியாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.