Weather update| தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
Weather update| தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி, சென்னையிலும் அதன் புறநகரங்களிலும் நேற்று இரவு மிதமான முதல் கனமழை வரை பெய்தது. நுங்கம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனால் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள், மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.