தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு.. வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்! என்ன காரணம்?
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தங்களுடைய இடைக்கால மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி பி . சந்திரசேகரன் முன் நேற்றைய தினம் ( 11.7.2025) விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் இறுதியில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இடைக்கால உத்தரவு தங்களுக்கு எதிராக வந்தால் அது பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புதிதாக தொடங்கிய தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் அக்கட்சியினர் இடைக்கால உத்தரவை தள்ளி வைக்க கோரினர்.
ஆனால், நீதிபதி மறுப்பு தெரிவித்ததை அடுத்து தங்களுடைய இடைக்கால மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் பிரதான வழக்கை தொடர்ந்து நடத்துவதாகவும் பகுஜன் சமாஜின் தமிழக தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.