கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. திருமணம் செய்து கொள்ள காதலன் முடிவு.!
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவியை அவரது கல்லூரி காதலன் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இரவு, கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண்` நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், மாணவியின் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பிறகு, சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கருப்பசாமி மற்றும் காளீஸ்வரன், மதுரையச் சார்ந்த தவசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்றைய முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதன்படி, இந்தக் குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
இந்த சூழலில் தான், இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா கூறுகையில், ”இந்த சம்பவத்திற்கு பிறகு மாணவி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்களால் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்காக மதுரையைச் சேர்ந்த அந்த மாணவி அடிக்கடி கோவை வரவேண்டியிருந்ததால், அவர் காதலன் பெற்றோரின் சம்மதத்துடன் அவர் வீட்டிலேயே அறை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும், மாணவியை தேற்றுவதிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
5 ஆண்டுகளாக காதலித்து வந்த மாணவி பாதிக்கப்பட்டது.,அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. இந்த சூழலில் தான், நடந்தவற்றையெல்லாம் ஒரு கெட்ட கனவாக மறந்துவிட்டு அந்த மாணவியை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக அவரது காதலன் கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

