”சமூக நீதியை காப்பாற்றியவர் ராமர்.. ஆணவப் படுகொலைக்கு..” - வன்னியரசு பேச்சுக்கு தமிழிசை கண்டனம்!
பிராமணர்களுக்காக கொலை செய்தவன் ராமன் - வன்னியரசு பேச்சு
ராமர் குறித்த வன்னி அரசு பேச்சுக்கு தமிழிசை கண்டனம்
சமூக நீதியை காப்பாற்றியவர் ராமர் - தமிழிசை
ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கோரி நடந்த கருத்தரங்கில் விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, சாதி மாறி தவம் செய்தால் கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறது ராமாயணம். பார்ப்பனருக்காக கொலை செய்தவர் ராமன் எனவும் இந்து மதம் அழிக்கப் பட வேண்டிய மதம் எனவும் எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் மருதமலையில் சாமி தரிசனம் செய்த பின் தமிழ்நாடு பாஜக-வின் முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமர் என வன்னி அரசு பேசியிருந்ததற்கு கடுமையான எதிர்வினையாற்றி இருக்கிறார்.
மருதமலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, “ராமர் குறித்து வன்னியரசு பேசியதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பிராமணர்களுக்காக ராமன் ஒரு பழங்குடியினரை கொன்றாக வன்னி அரசு சொல்கிறார். நீங்கள் ராமரை நம்புவதாக இருந்தால் விபீஷனுக்கு உதவி செய்தவன் ராமன், வானரங்களுடன் இருந்தவன் ராமன். அவ்வாறு சமூக நீதியை காப்பாற்றியவர் ராமர். ஆணவக்கொலையை தடுப்பதற்கு உங்களால் முடியவில்லை. ஆட்சி உங்களிடம் இருக்கிறது ஆனால் உங்களால் ஏன் ஆணவக்கொலைக்கு எதிராக ஏன் சட்டம் கொண்டுவர முடியவில்லை.
ஆனால் நீங்கள் ஆணவக்கொலைக்கு காரணம் ராமன் என்றும் சனாதானம் என்றும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். கூட்டணிக்காக கூழைக்கும்பிடு போடுவதை விடுத்து முதல்வர் ஸ்டாலினை போய் கேளுங்கள், போராட்டம் நடத்துங்கள் ஆணவக்கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் என்று, ஆணவக்கொலைகளுக்கு எதிரான சட்டம் ராஜஸ்தானில் உள்ளது, உத்திரபிரதேசத்தில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கொண்டு வர தயங்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் நடப்பதற்கு காரணம் ஸ்டாலின் அரசு தான் என்பதை நான் அழுத்திக் கூறுவேன்” என்று கூறினார்.