திமுக மீது அதிருப்தி.. பொற்கொடி - அன்புமணி சந்திப்பு.. அதிமுக கூட்டணியில் இணைகிறாரா?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்க். இவர், கடந்த 2024 ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பிறகு அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு அவர் தொடங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி கூட்டத்தில், வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும், இது குறித்து பொற்கொடி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை சென்னையில் கடந்த 25ஆம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் பொற்கொடி இருப்பதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கான முயற்சியாக இந்த சந்திப்பு அமைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

