திட்டங்களின் பெயர் மாற்றம்.. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு.. புதிய பெயர் என்ன தெரியுமா?
தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து இந்த திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட நிலையில், கொரானா பரவல் காரணமாக 2020 காலகட்டத்தில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஜனவரி மாதம் 'உலகம் உங்கள் கையில்' என்ற புதிய பெயரில் இந்த மடிக்கணினி திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்தc சூழலில் தவெக அரசு பொறுப்பெற்றுள்ள நிலையில், அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, புதிதாக 'வெற்றி மடிக்கணினி திட்டம்' என வைக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'முதல்வர் படைப்பகம்' திட்டத்தின் பெயர் 'டிஜிட்டல் நூலகம்' என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் வெற்றி என தொடங்கும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றப்பட்டதாக விமர்சனம் எழுந்து வருகிறது. குறிப்பாக 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என்றும், 'நான் முதல்வன்' திட்டம் 'திறன் தமிழ்நாடு' திட்டம் என்றும், ' மகளிர் விடியல் பயணம்' திட்டம் 'மகளிர் பயணம்' என்றும், 'முதல்வரின் தாயுமானவர் திட்டம்' 'வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம்' என்றும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் பெயர், தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

