ஆம்பூர் | ”கந்து வட்டிக் கொடுமை தாங்க முடியல” கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று பல தொழில்களை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தொழில்களில் நஷ்டம் ஏற்படவே, குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் நடத்திவரும் தீனதயாளன், விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி மற்றும் கோவையை சேர்ந்த நபர் என 3 பேரிடம் 20 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.
கந்து வட்டிக் கொடுமை - மன உளைச்சலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு:
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள், கடனை திருப்பிக் கேட்டதோடு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாகவும் கடன் கொடுத்தவர்கள் அவரை அடித்து துன்புறுத்தி அதிக மன உளைச்சலுக்கு உண்டாக்கியதாகவும் கூறப்படுகிறது. கடன் தொகையை முழுவதும் கொடுத்த பின்பும் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் செல்வகுமார், அதிக மன உளைச்சலில், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உருக்கமாக கடிதம்
இதையடுத்து தனது இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும். தனது இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாக தனது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் வீடியோ அனுப்பியதோடு, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, செல்வகுமார் கடைசியாக பேசிய வீடியோ மற்றும், கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடலை வாங்க மறுத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட உறவினர்கள்:
இதைத் தொடர்ந்து செல்வகுமாரின் உடல் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து செல்வகுமாரின் இறப்பிற்கு முக்கிய காரணமான விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி மற்றும் அவரது மகன்கள் தினேஷ் மற்றும் செல்வா ஆகியோரை உடனடியாக கைது செய்யக் கோரியும், அதுவரையில் செல்வகுமாரின் உடலை வாங்கமாட்டோம் என செல்வகுமாரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
செல்வகுமாரின் உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை:
இதையடுத்து ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர் ,செல்வகுமாரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து தினேஷ் என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, செல்வகுமாரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். கந்துவட்டி கொடுமையால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.