பாஜக 11% வாக்குகளைப் பெற்றது எப்படி? தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கமா? புதிய குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தைத் தாண்டி, தற்போது நாடெங்கும் ஓங்கி ஒலிப்பதாக, ‘ஓட்டு திருட்டு’ எனும் சொல்லாடல் உருவெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் சமூகப் போராளியான டீஸ்டா செடல்வாட். இதுகுறித்த பெருஞ்செய்தியைப் பார்க்கலாம்.
தேர்தல் ஆணையம் மீது ராகுல் வீசிய குண்டு!
பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்துக்கு பிறகு வெளியான பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக பின்னணியில் இயக்க, தேர்தல் ஆணையம் மிகப் பெரிய மோசடியை அரங்கேற்றி உள்ளதாக கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரவுகளுடன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடுத்த பேரதிர்ச்சியை உருவாக்கின. நாட்டிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைய இந்த விவகாரம் இப்போது பெரும் புயலை உருவாக்கியிருக்கிறது.
பீகாரைப் போல் தமிழ்நாட்டிலும்..
இந்த சூழலில்தான் சென்னைக்கு வந்த சமூகச் செயல்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட், “பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் மோசடி நடைபெற்றுள்ளது” என்று ஒரு பெரும் குண்டை வீசியிருக்கிறார். 2002இல் நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாய் நின்ற வழக்குரைஞர் என்பதோடு இன்றைய பாஜக ஆட்சி காலகட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டுவருபவர் டீஸ்டா செடல்வாட்.
’டீஸ்டா செடல்வாட்’ சொன்ன பகீர் தகவல்
“தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் பாஜக 11 சதவிகித வாக்குகளை பெற்றது. பாஜக போட்டியிட்ட 23 தொகுதிகளில் 19 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 40 லட்சம் வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையெல்லாம் தமிழ்நட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் எளிதாக எடுத்துகொள்ள வேண்டாம். இதற்கான பின்னணியே வேறு!
2016 சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.77 கோடி. அடுத்துவந்த 2019 மக்களவைத் தேர்தலில் புதிய வாக்காளர்களையும் சேர்த்து 6.24 கோடியாக வாக்காளர்கள் எண்ணிக்கை இருந்தது. தொடர்ந்து வந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 6.29 கோடியாக அதிகரித்தது. ஆக, சராசரியாக 2016, 2019 ஆண்டுகளில் 40 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால், 2021 தேர்தலுக்கும் 2024 தேர்தலுக்கும் இடையிலான எண்ணிக்கையை ஒப்பிடும்போதும், வெறும் 5 லட்சம் வாக்காளர்கள் மட்டும்தான் அதிகரித்துள்ளனர். இதன் மூலம் இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள், தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது. எப்படி இப்படி 30 லட்சம் வாக்காளர்கள் மாயமாகிப்போனார்கள்? இதன் பின்னணி என்னவென்பதை தமிழ்நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம் இது!” என்று இந்தக் கருத்தரங்கில் பேசினார் டீஸ்டா செடல்வாட்.
இதோடு டீஸ்டா நிறுத்தவில்லை. “2016ஆம் ஆண்டில் இருந்து FORM -6, 7 தகவல்களை நாம் கேட்டுப்பெற வேண்டும். தேர்தல் தரவு பகுப்பாய்வாளரான பியாரெ லால் கார்க், தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை 76 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுகிறார்.
எனவே, இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், மக்களும் தீவிர கவனம் செலுத்துவதோடு, கடந்த 5 தேர்தல்களின் வாக்காளர் பட்டியல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றதோடு, 2026 சட்டமன்ற தேர்தல் எளிதாக இருக்காது என்றும் எச்சரித்தார் டீஸ்டா செடல்வாட். இப்படி ஒரு குற்றச்சாட்டை டீஸ்டா செடல்வாட் வீசியது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலுக்கு வழிவகுக்கும் என்று தெரிகிறது.
முந்தைய தேர்தல்களில் 5.5% வாக்குகளைக்கூட தாண்டாத பாஜக, 2024 தேர்தலில் 11% வாக்குகளைப் பெற்றதோடு, பல இடங்களில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது எல்லா தரப்பினரையுமே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. இதற்கு மாறிவரும் அரசியல் சூழலே காரணம் என்று நம்பப்பட்டுவந்த நிலையில். டீஸ்டா செடல்வாட்டின் குற்றச்சாட்டு வேறு ஓர் அர்த்தப்பாட்டை கொடுப்பதுடன், தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து விரிவான விளக்கம் அளிப்பதே முறையான பதிலாக அமையும். தேர்தல் ஆணையத்தின் எதிர்வினையைப் பொறுத்திருந்து பார்ப்போம்!