ஆட்சியைப் பிடிக்கும் TVK? பேச்சுவார்த்தையில் அதிமுக? கருத்துக்கணிப்பால் மாறும் அரசியல் களம்?
ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்புகளைத் தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 118 இடங்களை தேவை என்ற நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளும் (பிரஜா போல்ஸ், பீப்பிள்ஸ் இன்சைட், ரிபப்ளிக் - பி மார்க், மேட்ரிஸ், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்) திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தன.
அதேநேரத்தில், ஜேவிசி டைம்ஸ் நவ் அதிமுக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்திருந்தது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், சற்று தாமதமாக தனது கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஆக்சிஸ் மை இந்தியா, விஜயின் தவெக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தது. இது, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி, வெவ்வேறு கருத்துக்கணிப்புகளும் மாறிமாறி வெளிவந்துள்ளதால், ஒட்டுமொத்த அரசியல் தொண்டர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மொத்தத்தில், கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையான முடிவைத் தராது என்பதால், எல்லோரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்புகளைத் தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளின்படி, விஜயின் கட்சி 98 முதல் 120 இடங்களைப் பெற்று திமுக தலைமையிலான கூட்டணிக்கு இணையாக இருக்கும் என்றும், திமுக-காங்கிரஸ் கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 22 முதல் 32 இடங்களையும் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலும் அதிமுகவே இரண்டாம் இடம் வகிக்கும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.
இதையடுத்தே, விஜயின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை அதிமுக ஆராய்ந்து வருவதாகவும், காங்கிரஸ் வெல்லும் இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே விஜயின் பங்கு அமையும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து இருதரப்பிலும் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, இரு கட்சிகளும் தனித்தனியே நின்று தேர்தலைச் சந்தித்ததுடன், இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரேயொரு கருத்துக்கணிப்பால், தமிழகத்தில் அரசியல் களம் மாறப்போகிறதா என்பது மே 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

