திமுகவா.. தவெகவா.. அண்ணாமலையா? எங்கு செல்லக்கூடும் சி.விஜயபாஸ்கர்? விரைவில் முடிவு!
தவெக, திமுக, அண்ணாமலை என முத்தரப்போடும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருந்தாலும் விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட நகர்வு என்ன? ஆதரிக்கும் கட்சியோடு செல்லப் போகிறாரா..? அரவணைக்கும் கட்சியோடு செல்லப் போகிறாரா..? என்ற எதிர்பார்ப்பும் விரிந்துகொண்டே செல்கிறது.
செய்தியாளர் ; சுப. முத்துப்பழம்பதி
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர், 8 ஆண்டுக்காலம் அமைச்சர், அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவர், மாவட்டச் செயலாளர் என அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த சி.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியில் இருந்து விலகியதோடு, அந்த கட்சியில் இருந்தும் உருக்கத்தோடு விலகி உள்ளார். வாருங்கள் அவர் குறித்த தொகுப்பை இங்கு பார்ப்போம்..
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூரைச் சொந்த ஊராகக் கொண்டவர் சி.விஜயபாஸ்கர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோதே ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனின் தயவோடு மாணவர் அணியில் பொறுப்பைப் பெற்று உற்சாகமான பயணத்தை அரசியல் வாழ்வில் தொடங்கியவர் சி. விஜயபாஸ்கர்.
2001ஆம் ஆண்டு 26 வயதில் முதன்முதலில் புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர், பின் 2011, 2016, 2021, 2026 ஆகிய நான்கு தேர்தல்களிலும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றார்.
மொத்தம் 5 முறை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர். அதில் ஒன்பது ஆண்டுகாலம். 2013 முதல் 2021 வரை 8 ஆண்டுக்காலம் அமைச்சர். அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவர். புதுக்கோட்டையின் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் என நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுக்காலம் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்தவர் சி. விஜயபாஸ்கர். ஆனால் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய தாக்கம் அதிமுகவின் தலைமை மீது சி.விஜயபாஸ்கரையும் சி.வி.சண்முகம் தரப்போடு சேர்ந்து கேள்வி எழுப்பவைத்தது. அதன் விளைவு அவரது மாவட்டச் செயலாளர் பதவியை பறித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிலிருந்தே அதிருப்தியில் இருந்த சி.விஜயபாஸ்கர் அதன் பின்பு எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுத்து தனது ஆதரவாளர்களோடும் விராலிமலை தொகுதி மக்களோடும் கலந்து ஆலோசனையில் ஈடுபட்ட அவர், இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததோடு அதிமுகவில் இருந்தும் உருக்கமான கடிதத்தோடு விலகி உள்ளார். இது அவரது ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில் கடினமான முடிவாகப் பார்க்கப்பட்டாலும் அவரைப் பொறுத்தவரையில் தான் எடுத்தது ஒரு நிதானமான முடிவு, தனது அரசியலின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான காலம் இதுவே என்றே கூறுகிறார்.
அடுத்ததாக விஜயபாஸ்கர் என்ன செய்யப் போகிறார் எந்த கட்சியோடு சேரப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்... தமிழகக் வெற்றிக் கழகத்தில் இன்னும் இரண்டு தினங்களுக்கு பின்பு முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்து சி.விஜயபாஸ்கர் பணியாற்றவே அதிக வாய்ப்புள்ளது என்கின்றனர் அவருடன் இருக்கும் நெருக்கமானவர்கள். அதற்கு காரணமும் உள்ளது.
மற்றவர்களைப்போல் இல்லாமல் முதல்வர் விஜயுடன் நேரடியாகவே பேசக்கூடிய அளவிற்கு நெருக்கமானவர்தான் விஜயபாஸ்கர் என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அதுமட்டுமின்றி, ஆளும் கட்சியாக தவெக உள்ளதும், தனக்குச் சாதகமாக அமையும் என விஜயபாஸ்கர் நினைப்பதாகவும் தேர்தலுக்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும். அந்தக் கட்சி 30 சதவீதம் வாக்குகளுக்கு மேல் வாங்க வாய்ப்பு உள்ளது என சரியாக கணித்ததோடு, அதற்காக எடப்பாடியிடம் அழுத்தம் கொடுத்தவரும் விஜயபாஸ்கர்தான் என்றும், ஆனால் அதனை அன்று எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்றும் அவரது நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜயபாஸ்கரின் முதல் சாய்ஸ், தமிழக வெற்றி கழகமாக இருக்கும்பட்சத்தில், அடுத்ததாக அவருடன் திமுக சார்பில் மலைக்கோட்டை அமைச்சர் ஒருவரும் மூத்த நிர்வாகிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விராலிமலையில் எப்படி இருந்தாலும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று விடுவார், அவரை திமுகவுக்கு கொண்டு வருவதன்மூலம் மத்திய மாவட்டத்தில் உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் புதிதாக கட்சி தொடங்க உள்ள அண்ணாமலையும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து விஜயபாஸ்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் சி.விஜயபாஸ்கரின் முதல் முடிவு தமிழக வெற்றிக் கழகமாகத்தான் இருக்கும் என்றும் இரண்டு நாட்களுக்குள் அதற்குள் ஏதும் மாயம் நடந்தால் அவர் திமுகவை நாடலாம் எனவும் கூறப்படுகிறது.

