மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்! முழு விவரம்...

அரசியலமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகளை அதிகாரப்பூர்வமான அலுவல் மொழிகளாக அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web

சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நீட் விலக்கு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக கூறியும், ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தியும், சட்ட ஒழுங்கை பாதுகாக்காத திமுக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்,

‘முக்கியத் தீர்மானங்களாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நடவடிக்கைகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது வேண்டுமென்றே திட்டமிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பச் செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கடும் கண்டனம்.

முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13.12.2023 ஆம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

சிறும்பான்மையின மக்களான இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுடைய நலன்களைப் பாதுகாக்கவும்; 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும் திமுக அரசுக்கு வலியுறுத்தல்.

தாய் மொழியாம் தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல் மொழுகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவர வலியுறுத்தல்’

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானங்கள் யாவும் வேகவேகமாக நிறைவேற்றப்படும் அதேவேளையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் கலந்துகொண்டவர்களுக்கு பிரம்மாண்டமாக உணவுகள் தயாராகி வருகின்றன. தம்ப்ரூட் அல்வா, வெஜ்பிரியாணி, வெங்காயம் வெள்ளரி மாதுளை தயிர் பச்சடி, பருப்பு வடை, புடலங்காய் கூட்டு, கோஸ் பீன்ஸ், கேரட் பட்டாணி பொறியல், பால்கறி கூட்டு, உருளை கிழங்கு மசாலா, வெண்டைக்காய், மொச்சை மண்டி, வத்தக்குழம்பு, கத்தரிக்காய், முருங்கைக்காய் பீன்ஸ் சாம்பார், தக்காளி ரசம், தயிர், ஊறுகாய், அப்பளம், பருப்பு நெய், மோர் மிளகாய், அடைப்பிரதமன் பாயாசம், வாழைப்பழம், ஐஸ்கிரீம், பீடா, வாட்டர் பாட்டில் போன்ற உணவுகள் பரிமாறப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com