ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவிப்பு... சொன்ன காரணம்!
4 ஆண்டுகளில் 3ஆவது முறையாக தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி. 2021 தேர்தலின்போது திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, மீண்டும் இடைத்தேர்தலை கண்டுள்ளது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி.
இந்த சூழலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், “I.N.D.I.A. கூட்டணியின் தமிழ்நாடு தலைவராக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார்” என நேற்று இரவு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தெரிவித்தது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் விசி சந்திரகுமார் போட்டியிடுவார் என இன்று காலை அறிவிப்பு வெளியானது. திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளராக இருக்கும் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக, தேமுதிக..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு பதிலாக திமுக போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் அறிவித்துள்ளன.
அதிமுக அறிவிப்பு...
இதுகுறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக, தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்பதால், புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
தேதிமுக அறிவிப்பு...
தேமுதிக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “இதற்கு முன்னர் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது ஜனநாயக விரோத தேர்தலை நடத்தி திமுக வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல்தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.