“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” - ஆதவ் அர்ஜுனா
மகாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று. 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த மகாகவி பாரதி, தனது படைப்புகள் வழியே இன்றளவும் அமரனாக வாழ்கிறார். இவரின் பிறந்தநாளுக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தவகையில், இது குறித்து ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய நாட்டின் சுதந்திர வேட்கைக்குத் தனது கவிதை வரிகளால் உயிரூட்டியவர். அடக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளைத் தனது பாடல்களில் உருவாக்கியவர். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சாதிக்கு எதிரான குரலை உரத்து முழங்கியவர், பெண்ணடிமை ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்றார்.
வறுமையான வாழ்வு தன்னை சூழ்ந்தபோதும் தான் கொண்ட கொள்கை இலட்சியத்தைக் கைவிடாதவர்.
நான் சோர்வடையும் பல நேரங்களில் எனக்கு உற்சாகம் கொடுக்கும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியின் பிறந்தநாளைப் போற்றுவோம்.
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ?.
- மகாகவி பாரதியார்.” என்று பதிவிட்டுள்ளார் ஆதவ் அர்ஜுனா.