மக்களவை தேர்தல் 2024 | "ED, INCOME TAX, CBI-க்கு பயப்படாத ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்" - ஆ.ராசா
செய்தியாளர் - மகேஷ்வரன்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ ராசா கூடலூரில் நேற்று வாக்கு சேகரிக்க சென்றார். அங்கு அவருக்கு சுமார் 2000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி, பெரும் வரவேற்பை வழங்கினர். தொடர்ந்து ஆ.ராசா மக்கள் மத்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உள்ளது. இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டிய முயற்சிக்கு வடமாநில தலைவர்கள் வர தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் ED, INCOME TAX, CBI. ஆனால் இவை அனைத்திற்கும் பயப்படாத ஒரே தலைவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பிரதமர் மோடி நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் நூற்றுக்கு 24 பேர் உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 100 க்கு 35 பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் 100 க்கு 10 பேர் மட்டுமே உள்ளனர். இவையாவும் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசு” என கூறினார்.