திமுக பிரமுகர் மீது ஆளுநரிடம் புகார் கொடுக்க வந்த கல்லூரி மாணவியால் பரபரப்பு – நடந்தது என்ன?
செய்தியாளர்: முருகேசன்
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஒருவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தெய்வச்செயலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், சில முக்கிய திமுக கட்சி நிர்வாகளுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி கொடுமை செய்ததால் அவர் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் அவரை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக அரக்கோணம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தெய்வச்செயல் அவரது மனைவி மூலம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.
இதனால், தனது வழக்கில் முறையான விசாரணை நடைபெற வில்லை என்றும், தனக்கு நீதி வேண்டும், எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுத்தி ஆளுநரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அந்த மாணவி வந்திருந்தார். அப்போது, ஆளுநர் சென்னையில் இல்லை. எனவே, ஆன்லைன் மூலம் புகார் கொடுங்கள் என்று போலீசார் கூறியதோடு, மாணவியை கிண்டியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆர்.டி.ஓ. இருந்த நிலையில் அவரை சந்திக்காமல், பெண் காவலருக்கு செல்போன் மூலம் வந்த தகவலின் அடிப்படையில், கிண்டி ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து,, கோயம்பேடு நோக்கி அதே ஆட்டோவில் பெண் காவலர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது, கிண்டி ஒலிம்பியா பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பெண் காவலர்களுடன் வாக்குவாதம் செய்து ஆட்டோவில் இருந்து இறங்கிய கல்லூரி மாணவியும் அவரது தாயாரும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது,
போலீசார் எங்களை கைதி போல் நடத்துவதால், நாங்கள் எங்கள் ஊருக்கே செல்கிறோம் என்று கூறிய நிலையில், இருவரும் தனியாக ஒரு ஆட்டோவில் ஏறி கோயம்பேடு நோக்கி புறப்பட்டனர். அப்போது ஆட்டோ அம்பாள் நகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அந்த ஆட்டோவில் இருந்து இறங்கிய இருவரும் மற்றொரு ஆட்டோ மூலம் சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலை நோக்கி பயணித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.